சுட்டிகளே,
அன்பு முத்தங்கள். உங்களுக்காக இதுவரை நான் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் சுமார் பனிரெண்டு சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும். சமீபத்தில் "மாயவிளக்கு" எனும் தலைப்பில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் எண்ணத்தில் இந்த நீதிக்கதை நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பதே உண்மை.
"மாயவிளக்கு" என்ற இந்த நூலை நீங்கள் ஒரு நாவல் போலவும் படிக்கலாம். அல்லது தனித்தனி சிறுகதைகளாகவும் படிக்கலாம். இந்த வகையில் இது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே நான் கருதுகிறேன்.
எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள நல்ல நல்ல கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் பண்புகள் நிறைந்த நல்ல மனிதர்களாக அனைவரும் போற்றும் விதமாக வாழ வேண்டும். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பெருமைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். தற்காலத்தில் வல்லவனாக இருப்பது அவசியம். மேலும் நல்லவனாக இருப்பது அதைவிட அவசியம்.